Friday, 18 December 2020

சந்திரஜாலம்

சிறுகதை போட்டிக்காக நான் எழுதிய சிறுகதை

                                                            சந்திரஜாலம்

     சந்துரு (எ) சந்திரன் திருமண வயதையடைந்த ஆண் மகன். பெயருக்கு ஏற்ப வசீகரமான முகம், வாட்டசாட்டமான உடலமைப்பையும் கொண்டிருந்தான். அவனுக்கு வாழ்வில் அனைத்தும் கிடைத்தது. வசதியான குடும்பம்.அக்கறையான பெற்றோர் மற்றும் உறவினர்கள். நன்றாக படித்து மென்பொருள் துறையில் நல்ல வேலையிலும் அமர்ந்தான்.அவனுக்கு பல பெண் நண்பர்களும் இருந்தனர். அவனை பல பெண்கள் விரும்பினாலும் இவன் மட்டும் யாரையும் விரும்பவில்லை.

பெற்றோர் பார்த்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக தன்னிடம் காதலை வெளிப்படுத்திய இளம் பெண்களிடம் கூறிவிட்டான்.சந்துருவிற்கு பெண் கொடுக்க பல குடும்பங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர். இதற்கிடையில், சந்துருவிக்கு தனது வருங்கால மனைவியைப் பற்றின கற்பனையெல்லாம் இல்லாமலில்லை. பெற்றோரிடம் சொல்லத் தயங்கினாலும் தனது கனவுக்கன்னியை மானசீகமாக ஆராதித்து வந்தான்.

இவ்வாறு இருக்கையில் அவனது பெற்றோருக்கு ஒரு ஜாதகம் வந்தது. மகனுடன் கலந்தாலோசித்த பெற்றோர் பெண்ணின் புகைபடத்தை அவனிடம் காட்டினர். சந்திரனுக்கு பிடித்தும் போனது. பெண் வீட்டாரும் சம்மதம் சொல்ல சந்திரனுக்கு திருமணம் கை கூடியது. திருமணம் உறவும், நட்பும் சூழ பெரிய திருவிழாவைப் போல் நடந்தது.

சந்திரனின் மனைவி சுமதி பெயருக்கேற்ப நல்ல புத்திசாலியாகவும்,ரூபவதியாகவும் இருந்தாள். சுமதி சந்திரனை மிகவும் நேசித்தாள்..சந்துரு தனது ஆசைகளையெல்லாம் அவள் மேல் பூக்களைச் போல் வாரி இறைத்தான்.

 சுமதி நல்ல மனைவியாகவும்,மருமகளாகவும் தனது கடமைகளைச் செய்து வந்தாள்.

பல மாதங்கள் கடந்து நாள்கள் நகர்ந்தன. சமுதாயம் சும்மா விடுமா? சந்திரனின் பெற்றோர்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஏதேனும் விசேஷமுண்டா எனக்கேட்டு நச்சரித்தனர். சந்திரனின் தாயார் சந்திரனிடம் சுமதியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லச் சொன்னார். சந்திரனும் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அங்கு மகளிர் நல மருத்துவர் சுமதியின் உடலை பரிசோதித்து விட்டு சந்திரனிடம் ரகசியமாக சுமதிக்கு இருக்கும் மரபணு சார்ந்த நோயைப் பற்றி விளக்கினார். இதனால் சுமதி என்றைக்கும் குழந்தை பெற முடியாது என்றும், நாளடைவில் தாம்பத்ய சுகத்தைக் கூட அவளால் துய்க்கவும்,‌ கொடுக்கவும் இயலாமல் போகும் என்ற உண்மையை சந்திரனிடம் கூறினார். சந்துரு இடிந்து போனான்

இதை ரகசியமாக காக்க வேண்டுமென சந்துரு முடிவு செய்தான். ஏனெனில், சுமதியின் குழந்தை பெறும் நம்பிக்கையை உடைக்க அவனுக்கு மனமில்லை. அதே சமயத்தில், அவளது உடலால் தாம்பத்ய சுகத்தையும் சந்திரனுக்கு தரவியலவில்லை. சந்துரு தனது மனைவியை வெறுக்க மனமில்லாமல் அவளிடம் இயல்பாக இருந்தான். சுமதியும் அவள் அத்தையும் கோவில் கோவிலாக சென்று குழந்தை வரத்துக்காக பிரார்த்தனைகள் செய்த வண்ணமிருந்தனர்.

    இந்நிலையில், சந்திரனுக்கு தனது உடலின் இச்சையை திருப்திப்படுத்த இயலாமல் தவித்தான். அவர்களது பெரிய வீட்டை சுத்தம் செய்ய ஒரு பெண்ணை சந்திரனின் தாயார் வைத்திருந்தார். ஒரு ஞாயிறு அன்று ஒரு பெண் வீட்டை சுத்தம் செய்ய வந்தாள். அப்போது தான் சந்துரு அந்த பெண்ணைப் முதல் முறையாகப் பார்த்தான். அவளின் பெயர் செல்வி.  சந்திரனுக்கு அப்பெண்ணை பார்த்ததும் உடலெங்கும் காமத்தீ பரவியது.

 எப்படியாவது தனது இச்சையை அவளிடம் தீர்த்துக்கொள்ள எண்ணினான். அவளை ரகசியமாக கவனிக்கத் தொடங்கினான்.வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தான் அவளை நெருங்கவியலும் என்றுணர்ந்த சந்துரு ஒரு திட்டம் தீட்டினான்.

  அவனது பெற்றோர் ரொம்ப நாட்களாக காசி யாத்திரை பற்றி பேசிக் கொண்டிருந்ததை தொடர்ந்து அவர்களைப் புனித யாத்திரை அனுப்ப முடிவு செய்தான். தானே முழு செலவையும் ஏற்றுக்கொண்டதோடு இருப்பதிலேயே மிகவும் வசதியான பயண நிறுவனத்தை அணுகி தன் பெற்றோரின் யாத்திரைக்கு ஏற்பாடு செய்தான். முப்பது நாட்கள் யாத்திரை அது. சார்தாமில் தொடங்கி காசி வரை ஏற்பாடானது. அவனது பெற்றோரிடம் திடீரென யாத்திரைக்கான விவரங்களைப் பகிர்ந்தான். அவர்களும் தங்கள் மகனின் குணத்தை எண்ணிப் பெருமையோடு யாத்திரைக்கு புறப்பட்டனர்.

ஒருவழியாக பெற்றோரை அனுப்பிய சந்துரு மனைவியையும் தன் அப்பா வீட்டுக்கு அனுப்பத் திட்டம் தீட்டினான். சுமதியிடம் மாமா வீட்டுக்கு செல்லலாம் எனக் கூறி அவளை அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் சுமதிக்கு சில நாட்கள் தனது தாயுடன் இருக்க ஆசை வந்தது.

 இதையே காரணம் காட்டி, அவளை அங்கேயே இருக்க வைத்துவிட்டு ஊர் திரும்பினான். தற்போது வீட்டில் சந்துரு மட்டும் தான். எப்பவும் போல செல்வி தனது வேலைக்கு வந்தாள். சந்துரு அந்நாளில் அலுவலகத்திற்கு விடுப்பெடுத்துக் கொண்டான். சமையலறையில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த செல்வியைப் பார்த்து தனது அறையில் நிறைய துணிகள் இருப்பதாகவும் வந்து எடுத்துப்போகச் சொன்னான். அவளும் யதார்த்தமாக சந்திரனின் அறைக்குள் செல்ல சந்துரு அறையை தாழிட்டான். செல்வி பதற்றமடைந்தாள். ஐயா துணி எடுக்கத்தானே சொன்னீர்கள் தற்போது ஏன் கதவை தாழிட்டீர்கள் எனக்கேட்டாள். அதற்கு சந்துரு அவளோடு சிறிது பேச வேண்டும் என்றான். அப்பாவியான அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் காட்டி, பணம் நிறையத் தருவதாக சொல்லி தனது ஆசைக்கு இணங்குமாறு வேண்டினான். ஆனால் அவள் இதெல்லாம் தவறு எனவும், தனது கணவருக்கு தான் துரோகம் செய்யக் கூடாது எனவும் கதறினாள். ஆனால் சந்துரு பலவந்தமான முறையில் அவளை தனது கட்டிலில் தள்ளினான். அவளின் புடவையை மெல்ல விலக்கினான். செல்வி பயந்திருந்தாலும் சந்திரனின் கை பட்டதும் இன்ப வெள்ளத்தில் தத்தளித்தவாறு இருந்தாள். புலியிடம் அகப்பட்ட மானைப் போல் செய்வதறியாது கிடந்தாள்.

இதற்கிடையில், வீட்டில் யாருமிருக்க மாட்டார்கள் என்றெண்ணிய சுமதி கணவனின் வீட்டுக்கு திடீரென வந்தடைந்தாள். வந்தவள், வாசலில் சந்திரனின் மகிழுந்து நிற்பதைக் கண்டாள். மெல்ல சென்று வாயிற் படியில் நின்ற போது அங்கு வேலைக்காரி செல்வியின் காலணிகள் மற்றும் அவள் தினமும் கொண்டு வரும் சாப்பாட்டுக் கூடையிருந்தது. சந்தேகமடைந்த சுமதி சற்று தூரம் திரும்பி வந்து சந்திரனை அலைபேசியில் தொடர்பு கொண்டாள். அப்போது சந்துரு தான் அலுவலகத்தில் அவசர வேலையாக இருப்பதாக பதற்றத்தோடு கூறி அழைப்பைத் துண்டித்தான். சந்துரு வீட்டிலிருப்பதை உறுதி செய்த சுமதி வீட்டைச் சுற்றி வர, வீட்டின் பின்னாலுள்ள படுக்கையறை ஜன்னலோரம் கிசு கிசு சத்தம் கேட்க அங்கு சென்று தங்கள் வீட்டுப் படுக்கை அறை சுவற்றிலிருக்கும் சிறிய துவாரத்தின் வழியாக பார்த்தபோது சுமதி பதறிவிட்டாள். தன் அன்பிற்குரிய கணவன் வேலைக்காரியின் புடவையை அவிழ்த்தவண்ணம் கிடப்பதைக்கண்டு மனமுடைந்தாள். அழுதே விட்டாள். கண்களை துடைத்துக்கொண்டு யாருமறியாமல் அங்கிருந்து வெளியேறி தன் அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டாள். தனது வேதனையை தன் பெற்றோரிடம் சுமதி பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. தானே ஒரு மருத்துவரை அணுகி தனக்கிருக்கும் நோயைப் பற்றி அறிந்து கொண்டாள். சந்துரு வீட்டில் அவள் பார்த்த காட்சிகள் அவள் மனதில் ஆழ்ந்த வடுக்களை உண்டாக்கினாலும் சந்திரனின் மேலிருந்த காதல் சிறிதும் கூட குறையவில்லை. சந்திரனின் திட்டமனைத்தும் சுமதிக்கு புரிந்துவிட்டது. ஏன் போனவுடனே திரும்பி விட்டாய் என்று கேட்கக்கூடிய தன் அம்மாவிடம் என்ன சொல்வதென திகைத்த சுமதிக்கு வாட்சப்பில் ஒரு நெருங்கிய சித்தப்பா முறையானவர் மறைந்த தகவல் காரணமாய் அமைந்தது. மறுபுறம்,  சந்துரு செல்வியை ஆரத்தழுவி தன் தாகத்தைத்தீர்த்துக்கொண்டான். " ஐயா, வயிற்றை கழுவுவதற்காக வேலைக்கு வருகிறோம் ஏன் இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்டீர்கள்” என சந்திரனை திட்டி தீர்த்தாள். தான் கலங்கப்பட்டு விட்டதாக கதறினாள்.கற்பை பறிகொடுத்த செல்வி செய்வதறியாமல் இங்குமங்கும் ஓடினாள். சந்துரு எவ்வளவு காசை அள்ளி வீசியும் அவள் கேட்கவில்லை. கடைசியில் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து தன் வயிற்றில் தானே குத்திக்கொண்டு "உன்னை பழி தீர்ப்பேன்" எனக்கூறிக் கொண்டே சுருண்டு விழுந்தாள் செல்வி. ரத்த வெள்ளமோடியது. ஆறாக ஓடும் ரத்தத்தை கண்டதும் சந்திரனுக்கு பயம் தொற்றிக்கொண்டது.

உடல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஆசைப்பட்டு இப்படியொரு பாதகம் செய்து விட்டோமே என குமிறி குமிறி அழுதான். செல்வியின் உயிர் காற்றில் கரைந்திருந்தது. சந்துரு ரத்தத்தை சுத்தம் செய்து, நள்ளிரவு வரை பிணத்தை தனது அறையில் வைத்திருந்து, நள்ளிரவில் தனது மகிழ்வுந்தில் பிணத்தையேற்றி பக்கத்து

 கிராமத்திலுள்ள சுடுகாட்டுக்கு சென்று பிணத்தை எரிக்கத் திட்டமிட்டான்.

 

    திட்டத்தின்படி நள்ளிரவில் சுடுகாட்டையடைந்தான். அன்று அமாவாசை. சுற்றியும் கும் இருட்டு. சுற்றிலும் மரங்கள் வேறு. பிணத்தை சுமக்க முடியாமல் சுமந்து வந்த சந்திரனை எதிர்பாராத விதமாக அங்கு சுடுகாட்டு வெட்டியான் ஒருவன் இவன் பிணத்தோடு வருவதைப் பார்த்து இவனை நெருங்கி வந்தான்.

 வெட்டியானை பார்த்த பயத்தில் நடந்த உண்மையை உளறிவிட்டான் சந்திரன்.

வெட்டியானுக்கு தன் சட்டைப்பையிலிருந்த இரண்டாயிரம் ரூபாய் கட்டை நீட்டினான். வெட்டியான் முதலில் அதை வாங்க மறுத்தாலும் தனது குழந்தையின் படிப்புச் செலவை மனதில் கொண்டு அதைப் பெற்றுக் கொண்டான். பிணத்தைக் காலைக்குள் உருத்தெரியாமல் எரியவிடுவதாகவும் வாக்களித்தான்.சந்திரனும், வெட்டியானும் பிணத்தை எரிக்கத்தொடங்கியவுடன் திடீரென வானத்துக்கும் பூமிக்கும் ஓர் முகம் போன்ற உருவம் தோன்றி "அவனை பழி தீர்ப்பேன்" என இடியாக முழங்கி மறைந்தது. வெட்டியான் மயங்கி விழுந்தான்.பிணம் முழுவதும் எரிந்து சாம்பலானது. சந்துரு பதற்றத்தில் எப்படியோ காரை பிடித்து வீடு வந்து சேர்ந்தான். அப்போது அதிகாலை மூன்று மணி.தண்ணீரை கபக் கபக் கெனக் குடித்தான். பயத்தில் உறங்கியே விட்டான்.

இதற்கிடையில், காசியில் சந்திரனின் பெற்றோர் அங்கு நடந்து கொண்டிருந்த மகா ம்ருத்யூந் ஜய ஹோமத்தில் பங்கெடுத்தனர். அவர்கள் தங்களது மகனின் பூரண ஆயுளுக்காக யதார்த்தமாக பூஜை செய்தனர். அந்த மகாயாகத்தின் பலனாகவும் சுமதியின் பதி பக்தியின் பலத்தாலும் அந்தப் பேய் தூங்கிக்கொண்டிருந்த சந்திரனின் கனவில் தோன்றி அவனுக்கு உயிர் பிச்சையளிப்பதாகவும் ஆனால், அவன் செய்த பாவத்திற்கு ப்ராயச்சித்தமாக ஓர் அனாதைக் குழந்தையை தத்தெடுத்து அதற்கு செல்வி என்ற பெயரை வைத்து வளர்க்க ஆணையிட்டது. சந்துரு திடுக்கிட்டு எழுந்தான். மணி காலை ஏழாகியிருந்தது.

நாட்கள் உருண்டோடியது. சுமதி எதுவும் அறியாதது போல் வீட்டிற்கு வந்தாள். சந்துரு மனம் பொறுக்காமல் உண்மையை சுமதியிடம் உரைத்தான். சந்திரனின் பெற்றோரும் யாத்திரை முடிந்து வீடு திரும்பினர். பெற்றோர் சம்மதத்தோடு இருவரும் ஓர் பெண் குழந்தையை அரசாங்க விதிமுறைகளின் படி தத்தெடுத்து‌ அதற்கு செல்வி எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

***சுபம்***

   

                               



Saturday, 28 November 2020

கொரானா காலத்தில் குருவாயூர் யாத்திரை

  வணக்கம் நண்பர்களே,

                          எனக்கு கடந்த புதன்(25/11/2020) அன்று குருவாயூருக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது.நவம்பர் ஐந்தாம் தேதி எனது திறன்பேசி(smart phone) மூலம் குருவாயூர் கோவிலின் வலைதளத்தைப் பார்த்து, ஏதோ ஆர்வத்தில் எனக்கான தரிசன சீட்டையும் பதிவு செய்து விட்டேன். குருவாயூர் ஏகாதசி இம்மாதம் 25/11/2020 அன்று வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததால் ஒருமுறை அதை உறுதிப்படுத்திக்கொண்டு, 25 ஆம் தேதி குருவாயூருக்கு என முன்பதிவு செய்தேன்.

       இதைத் தொடர்ந்து, ஏழாம் தேதி ஒரு பக்தரிடம் இந்த விவரத்தைக் கூறி அவருக்கும் அதே நாளுக்கு முன்பதிவு செய்தேன். நாட்கள் செல்லச் செல்ல யாத்திரைக்கு இருவரும் தயாரானோம். 25ஆம் தேதியன்று காலை பதினோரு மணி எங்களது தரிசனத்திற்கான நேரம் என சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.  அதற்கு ஏற்றாற்போல் பயணத்தையமைக்கத் திட்டமிட்டு 25 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு வாளையாரை அடைந்து அதன்பின், பாலக்காடு பேருந்து ஏற திட்டமிட்டிருந்தோம். 23 ஆம் தேதி திங்கள் மாலை வரை இது தான் எங்களது திட்டமாக இருந்தது. ஆனால் திடீரென திங்களன்று மாலை அந்த திட்டம் மாறியது. மேலே சொன்ன பக்தர் தனது கேரள நண்பர்களிடம் விசாரித்த போது பேருந்தை நம்ப வேண்டாம் எனக்கூறியதையடுத்து அவர் ரயிலுக்கு முன்பதிவு செய்யலாமென பரிந்துரைத்தார். உடனே ரயில் நிலையத்திற்கு விரைந்து பட்டாம்பி வரை முன்பதிவு செய்ய முற்பட்டோம் ஆனால், பட்டாம்பி வரை முன்பதிவு செய்ய இயலவில்லை. எனவே பாலக்காடு வரை முன்பதிவு செய்தோம். சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் அதிவிரைவு ரயிலில் இடம் கிடைத்தது.

        25ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு ரயிலேற வேண்டும். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து ரயில்நிலையம் 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. எனவே, 25 ஆம் தேதி காலையில் 2:30 மணியளவில் நடக்க ஆரம்பித்து அரை மணி நேர நடையில்  ரயில் நிலையத்தையடைந்தோம். பின், உரிய தளத்திற்கு சென்று காத்திருந்த பின் நான்கு மணியளவில் ரயிலில் ஏறினோம். ஒரு மணி நேர பயணத்தின் விளைவாக காலை ஐந்து மணிக்கு பாலக்காட்டையடைந்தோம்.

   பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதற்கு பேருந்து கிடைக்க அரை மணி நேர தவம். பின் அங்கிருந்து பாலக்காடு பேருந்து நிலையத்துக்குச் சென்று திருச்சூர் பேருந்தைப் பிடித்து சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு எட்டு மணியளவில் திருச்சூரை அடைந்தோம். திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து குருவாயூருக்கு நிறைய பேருந்துகள் உள்ளன. 1:15 மணி நேர பயணம் செய்து காலை 9:15 மணிக்கு குருவாயூரை அடைந்தோம். குருவாயூரில், தேவஸ்தான யாத்ரிகர் சௌகர்ய நிலையத்தில் குளித்துவிட்டு, நடைப்பயணமாக மம்மீயூர் மகாதேவனை தரிசிக்கச் சென்றோம். காலை பத்து மணியளவில் மம்மீயூரை அடைந்து மம்மீயூரப்பனையும்,மகா விஷ்ணுவையும் தரிசித்து, ஆலய த்வஜஸ்தம்ப (கொடிமரம்) பிரகாரத்தில் மகாவிஷ்ணு சந்நிதி முன்னமர்ந்து ஒரு பதினைந்து நிமிடங்கள் திருநாம சங்கீர்த்தனம் செய்து விட்டு பத்தே முக்கால் மணிக்கு மீண்டும் குருவாயூரை நோக்கி வந்து, தரிசனத்திற்கான வரிசையில் எங்களது இணையவழி தரிசன முன்பதிவு சீட்டை எடுத்துக் கொண்டு நின்றோம். தரிசனத்திற்கு செல்லும் போது எவ்வித மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. கைப்பை முதலிய எதையும் அனுமதிப்பதில்லை. ஆண்கள் வேஷ்டியுடனும், பெண்கள் சம்பிரதாய உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள். 

      ஆண்கள், மேல் சட்டையை வரிசையில் காத்திருக்கும் போது மட்டும் அணியலாம். தரிசனத்திற்கு செல்லும் போது சட்டையைக் கழற்றி விட வேண்டும். காலை பதினோரு மணிக்கு வரிசையில் நின்று நாங்கள் மதியம் மூன்றே கால் மணிக்குத் தான் குருவாயூரப்பனைக் கண்டோம்.. வரிசையில் காத்திருந்த போது பக்தர்கள் சிலர் சேர்ந்து சத்தமாக நாம சங்கீர்த்தனம்  செய்தோம். நாங்கள் பாடிய பஜனை வரிகள் குருவாயூரப்பனின் பரமபக்தரான பூந்தானம் அருளிய,

" கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்தநா

                               கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே

    அச்சுதானந்த கோவிந்த மாதவ

                                சச்சிதானந்த நாராயணா ஹரே"


     குருவாயூரப்பன் சங்கம்,சக்ரம், கதா,பத்மம் தாங்கி தரிசனமளித்தான்.       நல்ல தரிசனம் தான். நாலம்பலத்தில் அனுமதிக்காதது சற்று ஏமாற்றமாக இருந்தது. குருவாயூர் அப்பனின் கர்பகிரஹம் இருக்கும் இடம்   'ஸ்ரீ கோவில்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீ கோவிலைச் சுற்றியுள்ள முதல் பிரகாரமே நாலம்பலம் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக பக்தர்கள் இந்த நாலம்பலத்தில் சென்று குருவாயூரப்பனை தரிசனம் செய்வார்கள். ஆனால், தற்போது நோய் அச்சுறுத்தல் காரணமாக நாலம்பலத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.

         தரிசனத்தைத் தொடர்ந்து த்வஜஸ்தம்ப பிரகாரத்தை வலம் வந்து  வெளியேவந்தோம்.  வெளியே இன்னும் கூட்டம் குறைந்தபாடில்லை...குருவாயூரப்பனுக்கும் கேரள மக்களுக்கும் என்ன அப்படியோர் பந்தமோ என எண்ணி பொறாமை கொள்ளச் செய்கிறது. அப்பனுக்கு காணிக்கையாக ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை சமர்ப்பிக்கிறார்கள். அப்பப்பா, எத்தனை தார் தாராக பழங்கள், கனிவகைகள், பூக்கள், மூட்டை மூட்டையாக தானியங்கள் மற்றும் நெய். 

      அதுபோக, விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்யும் பக்தர்களைக் கண்டாலே நாத்திகனுக்கும் பக்தி வந்துவிடும். இவ்வாறு,  மாயக்கண்ணனின் சாம்ராஜ்யம் அமைதியாக குருவாயூரில் அவன் தலைமையில் அவன் அடியார்களுடன் நடக்கிறது.

          தரிசனம் கிடைத்த பரவசத்தோடு நேரே தெற்கு நடையிலுள்ள பிரசாத கவுண்டருக்கு வந்து பிரசாதம் வாங்க வந்து நின்றோம். அங்கு நான்கு மணிக்குத்தான் பிரசாதம் விநியோகம் தொடங்கும் என்பதைத் தெரிந்து கொண்டு காத்திருந்தோம்.  கவுண்டர் திறந்தவுடன் பிரசாதம் வாங்கி விட்டு பேருந்து ஏறப் புறப்பட்டோம். பாலகாட்டிற்கு பட்டாம்பி வழியாகச் செல்லும் பேருந்தில் ஓடி சென்று ஏறினோம்..அது தான் அன்றைய கடைசி பேருந்தாம். மணி அப்போது மாலை 4:40.


         காலை இரண்டு மணிக்கு கிளம்பியதால் ஏற்பட்ட அசதி காரணமாக சிறிது நேரம் உறங்கி விட்டோம். பேருந்து சொரனுர், ஒட்டபாலம் வழியாக இரவு 7:30 மணிக்கு பாலக்காட்டையடைந்தது.அங்கு இறங்கி கோவை பேருந்தை தேடினோம் கிடைக்கவில்லை. ஒருவரிடம் கேட்டபோது அவர் கோவைக்கு பேருந்து இனி  இல்லை வாளையாருக்கு சென்று போகுமாறு பரிந்துரைத்தார். எனவே வாளையார் பேருந்தைப் பிடிக்க ஆட்டோ பிடித்து அந்த நபர் கூறிய ஸ்டேடியம் பஸ் நிலையத்தையடைந்தோம்.ஆனால், அங்கு வாளையார் செல்லும் அன்றைய கடைசி பேருந்தும் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக கூறினார்கள்.


          என்னோடு வந்த பக்தர் மனம் தளர்ந்து,உடல் சோர்ந்து விட்டார். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் இருக்கும் சமயத்தில் குருவாயூரப்பன் அருளால் ஒரு சிந்தனை தோன்றியது. ரயில் நிலையம் சென்று ஏதேனும் ஒரு சிறப்பு ரயிலிலாவது ஏறி கோவையை அடைந்து விட வேண்டும் என்ற சிந்தனை. சற்றும் தாமதிக்காமல், ஒரு ஆட்டோவைப் பிடித்து உழவக்கோடு ரயில் நிலையத்தையடைந்து பயணச்சீட்டு அலுவலரிடம் விசியத்தைச் சொன்னோம்.


      அவர் சார்ட் க்லோஸ்சாகிவிட்டது . இனி தங்களால் ஏதும் உதவ முடியாது என்றார். பின் முன்பதிவு மையத்தில் இருந்த ஒரு இளம் பெண் நாங்கள் பதற்றத்தோடு இருப்பதைப் பார்த்து எங்களையழைத்து எங்கு போக வேண்டும் என்னவாயிற்று என்பதை விசாரித்து உடனே தனது கணினி திரையில் ஏதோ பார்த்த வண்ணம் 'கோவையா?' எனக் கேட்டார்.  நான் ஆம் என்று சொன்னேன். இரண்டு டிக்கெட் மட்டும் படுக்கை வகை பெட்டியில் இருப்பதாகக் கூறினார் அந்த பெண். அந்த பெண் மலையாளம் கலந்த தமிழில் அழகாகப் பேசினாள். ஆனால் அவள் பேச்சை ரசிக்க அப்போதைய சமயம் அனுமதிக்கவில்லை. விலை கொஞ்சம் கூடுதலாக ஆகும் எனக் கூறினாள். மேலும், அடுத்த நாள் அங்கு முழு அடைப்பு நிகழப்போவதாகவும் தெரிவித்தாள். நான் எப்படியாவது வீடு போய் சேர்ந்தால் போதுமென டிக்கெட் போடச்சொன்னேன். அந்த பெண் தொகையைக் கூறியதும் என்னிடம் போதிய பணமில்லை. எனவே, ஏ.டி.எம் சென்று பணம் எடுக்கச் சென்றேன். ஒரு இயந்திரம் இயங்கவில்லை. அருகிலிருந்த இயந்திரத்தில் பணத்தைப் பெற்று முன்பதிவு மையத்திற்கு விரைந்தேன். மணி அப்போது இரவு  8:40. 9:00 மணிக்கு வண்டி வந்துவிடும் என அந்தப் பெண் கூறியிருந்தார்.

       டிக்கெட் தொகையை செலுத்தியவுடன் எங்களுக்கான பயணச்சீட்டை அந்த பெண் அச்சடித்து கொடுத்தார். 'மதியெல்லோ' என மலையாளத்தில் சொல்லி, வண்டி பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில் எனவும், நான்காவது தளத்தில் சற்று தாமதமாக ஒன்போதரை மணிக்கு வரும் எனவும் பதற்றபடாமல் நிதானமாக செல்லுமாறும் கூறினார். நான், தோளில் எனது துணிப்பையையும், மனதில் அந்த பெண்ணின் முகத்தையும், இனிமையான குரலையும் சுமந்து கொண்டே நான்காம் தளத்தை நோக்கிச் சென்றேன்.


        நானும், என்னுடன் வந்த அந்த பக்தரும் அன்று ஏகாதசி என்பதால் எதுவும் உண்ணவில்லை. நான்காம் தளத்தை அடைந்ததும் எங்களை நாங்கள் ஆஸ்வாஸப்படுத்தி,  ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து குருவாயூரப்பனின் பிரசாதமான ஓர் வாழைப்பழத்தை மட்டும் உண்டோம்.


       இரவு 9:30 மணிக்கு ரயில் வந்ததும் எங்களுக்கான பெட்டியிலேறி எங்கள் இடத்தில் அமர்ந்தோம்.  ரயில் புறப்பட்டது. நாங்கள், ஒருவழியாக கோவையை இரவு 11:00 மணிக்கு அடைந்தோம்.  அங்கிருந்து ஒரு காரில் தத்தமது இல்லங்களை அடைந்து குருவாயூரப்பனுக்கு நன்றி கூறினோம்.

           நாராயண... நாராயண....







                      

Wednesday, 1 July 2020

குருவாயூர் ஸ்தல வரலாறு


வணக்கம் நண்பர்களே,
           தேவசயானி ஏகாதசியான இந்த தினத்தில் குருவாயூர் ஸ்தல வரலாற்றை பகிர்வதில் ஆனந்தம் கொள்கிறேன்.