Monday 1 January 2024

வர்கலா பயணம்

 வணக்கம் நண்பர்களே, நான் கடந்த 28/12/2023 புதன் அன்று காலை ஆறு மணிக்கு வர்கலா பயணத்திற்காக கோவை ரயில்நிலையத்தை அடைந்தேன். எனது பயணம்  திடீரென நான் எடுத்த முடிவு என்பதால் என்னால் முன்பதிவு செய்ய இயலவில்லை. ஆகவே ஒரு முன்பதிவில்லா அனுமதிச் சீட்டை வாங்கிக்கொண்டு காத்திருந்தேன். என்னுடன் பயணிக்கப்போகும் சக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் ரயில் நிலையத்தின் முன்பகுதியில் காத்திருந்தனர். அவர்கள் ரயில்நிலையத்தின் முன்பகுதியில் இருக்கக்கண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டேன்.அனைவரும் வந்து சேர்ந்த பிறகு, நாங்கள் பயணிக்கவிருந்த சபரி விரைவு இரயில் நடைமேடை இரண்டில் வருவதையறிந்து நடைமேடை இரண்டுக்கு சென்றோம். இரயில் 07:55 மணிக்கு அங்கு சரியான நேரத்தில் வர அனைவரும் S9 முன்பதிவு பெட்டியில் ஏறினர். நான் முன்பதிவு செய்யாத காரணத்தால் இரயிலின் கடைசி பகுதியில் அமைந்த முன்பதிவில்லா பெட்டியில் ஏறினேன். எதிர்பார்த்த கூட்டமில்லை எனவே அனைவரும் விரும்பும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். இரயில் காலை 9:00 மணியளவில் பாலக்காட்டை அடைந்தது.முன்பே வாளையார் அருகே, சக கணித ஆசிரியர் பாலக்குமார் அவர்கள் அலைபேசியில் அழைத்து S9 பெட்டியில் இருக்கையிருப்பதாக கூற, பாலக்காட்டில் இரயிலிலிருந்து  இறங்கி S9 பெட்டிக்கு விரைந்தேன். அங்கு இருக்கையில் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து கொண்டேன். காலை உணவு பரிமாறப்பட்டது. மூன்று இட்லி மற்றும் கெட்டி சட்னி, சாம்பார்.இரயில் ஒட்டப்பாலம் கடந்து சொரணுரில் அதிக நேரம் நின்றது. பின், வேகமெடுத்து திருச்சூர்,ஆலுவா போன்ற ஊர்களைக் கடந்து சென்றது.  மதியம் ஒரு மணிக்கு மதிய உணவை அருந்தினோம். காளான் பிரயாணி, தயிர் சாதம் ஊறுகாயுடன் பரிமாறப்பட்டது. காலை மற்றும் மதிய உணவை வழங்கிய எங்கள் பள்ளி தலைமையாசிரியை திருமதி. பானுமதி அவர்களுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து, அவர் கொடுத்த நேந்திரம் பழ சிப்ஸ் பேகட்டை இரவு உணவிற்காக பத்திரப்படுத்திவிட்டேன். பின், கடலும், ஆறும் இணையும் இடங்கள், ஆறுகள், காடுகள் என இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு சென்றேன். இரயில் மாலை 17:30 மணிக்கு வர்கலா இரயில் நிலையத்தை அடைந்தது. வர்கலா இரயில் நிலையத்தில் அனில் என்ற பயண விரிவுரையாளர் அறிமுகமானார். அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பின்னர், 27 பேர் கொண்ட எங்கள் குழு நாங்கள் அன்றிரவு தங்கும் வீட்டிற்கு சென்றோம். திரு.அனில் அவர்கள் எங்களை வென்குளம் என்னும் ஊருக்கு அழைத்துச் சென்று வீட்டை காட்டினார். நாங்கள் அனைவரும் எங்களது அறைகளுக்கு சென்று நீராடி புத்துணர்வு பெற்று வர்கலாவில் 'அரபிகடலின் முத்து' எனப் புகழ்பெற்ற பாபநாசம் கடற்கரையை பார்க்கச் சென்றோம். இருள் சூழ்ந்ததால் ஏமாற்றமடைந்தாலும் கடற்கரையில் சிறிது நேரம் கழித்து விட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பினோம். நான் வர்கலாவில் கோவில் கொண்டுள்ள ஜனார்தனனை திசை நோக்கித் தொழுது கொண்டு விடுதிக்கு திரும்பினேன். இரவு விடுதியில் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்த நாள் காலையில் 06:00 மணிக்கு இரண்டு வேன்கள் வந்து நின்றது.  சரியாக 06:30 மணிக்கு வேனில் ஏறி புறப்பட்டு  முதலில் சிவகிரி என்ற இடத்திற்கு சென்றோம். இங்கே, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தத்துவம் மற்றும் சமூக சமத்துவத்திற்காக பாடுபட்ட ஸ்ரீ நாராயண குரு என்ற மகானின் சமாதி உள்ளது. இங்கே சிருங்கேரியில் உள்ளது போல் அன்னை சாரதா தேவி தாமரையில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அன்னையை வணங்கிவிட்டு மேலே நடந்தால் ஸ்ரீ நாராயண குரு பௌதிக உடல் நீத்த குடில். சாளரம் வழியாக அவரது அறையில் நாற்காழி முதலிய பொருட்களை காணமுடிந்தது. அதைத்தொடர்ந்து வந்தது, கண்ணாடி அறை அதில் ஸ்ரீ நாராயண குரு பயன்படுத்திய கோல்,குவளை,வண்டி உள்ளிட்ட பொருட்களை கண்டோம். பின் ஸ்ரீ நாராயண குருவின் மூத்த சீடரான போதாநந்தா ஸ்வாமிகளின் சமாதியை கண்டு வணங்கி மேலே செல்ல ஸ்ரீ நாராயண குருவின் சமாதி பளிங்கு கற்களால் ஆன அறையை காணமுடிந்தது. அவரது சமாதியில் ஒருவிதமான ஆன்மீக அதிர்வலைகளை சற்று உணர முடிந்தது. பின் மணல் பரப்பிய தளத்தில் நடக்கும் போது மூணாரிலிருந்து அங்கு வந்திருந்த மூத்த சந்நியாசி ஒருவர் ஓர் சிறிய  சொற்பொழிவு நடத்தி நெகிழவைத்தார். பின், காலை சிற்றுண்டியை சிவகிரி மடத்திலேயே பிரசாதமாக உண்டோம். நிலக்கடலை கலந்த புட்டும் வாழைப்பழமும் தந்தார்கள் அத்தோடு சுக்கும் கரும்பு சர்க்கரை கலந்த தேநீர். அருமையாக இருந்தது. பின், அங்கிருந்து கிளம்பி ஸ்ரீ நாராயண குருவின் பிறப்பிடமாக செம்பழந்தி என்ற இடத்திற்கு சென்றோம். இங்கு ஸ்ரீ நாராயண குருவின் கோவிலும் அவர் பிறந்த கூரை வீடும் அதே நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ நாராயண குருவின் தாய் ஆரிய வல்லபையின் ஓவியமும் இந்த அறையில் காணக்கிடைத்தது.  இங்கேயும் ஆன்மீக அதிர்வுகளை உணர முடிந்தது. பின், உலகத்திலேயே மிக உயரமான சிவலிங்கத்தைக்காண செங்கல் என்னும் சிவதலத்தை அடைந்தோம். இந்த இடத்தின் பெயர் செங்கல் மகேஸ்வரம். இந்த கோவிலில் சிவபெருமானும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் கர்பகிரகத்தில் தரிசனமளித்தனர். 108 வகையாக கணபதியின் சிற்பங்கள் கண்களை கவர்ந்தன. இங்கே எழுப்பப்பட்டிருக்கும் சிவலிங்கம் 112 அடி உயரம் கொண்டு உலகிலேயே மிக பிரம்மாண்டமான லிங்கமாக திகழ்கிறது. மகாதேவனின் அருளாசியோடு புறப்பட்டு அருவிபுரம் என்னும் தலத்தை அடைந்தோம். இங்கு ஸ்ரீ நாராயண குருவின் கையால் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் உள்ளது. இவ்விடத்தின் தெற்கே நதி ஒன்று ஓடுகிறது. இங்கே மதிய உணவை நாங்கள் அனைவரும் உண்டோம். பின், நாராயண குரு அவர்கள் தவமிருந்த குகைக்கு சென்றோம். ஆற்றின் கரையில் இயற்கை எழில் சூழ‌ அமைந்த குகையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து விட்டு கிளம்பினோம். தற்போது மதியம் மூன்று மணியை கடந்திருந்தது. அப்போது ஆழிமலா என்ற கடற்கரைக்குச் சென்று அங்கு நிறுவப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான சிவ பெருமானின் உருவத்தை கண்டு மெய்சிலிர்த்தோம். அந்த உருவம் சிமெண்ட் பூச்சாலும்,இரசாயன கலவையாலும் உண்டாக்கப்பட்டது. ஆழிமலையில் அரைமணி நேரம் செலவிட்டு, புகழ்பெற்ற கோவளம் கடற்கரைக்கு பயணித்தோம். மாலை 4:10 அளவில் கோவளத்தை அடைந்து கடற்கரையில் அலைகளுடன் விளையாடினோம். ஆர்ப்பரித்து வரும் அலைகளில் ஒரு மணிநேரம் விளையாடி 5:00 மணிக்கு கிளம்பி உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி ஆலயத்திற்கு 6:40 மணிக்கு வந்தடைந்தோம்.இரவு 08:30 மணிக்கு எங்களுக்கு இரயில் என்பதால் சீக்கிரமாக நடந்து பத்மநாப ஸ்வாமி ஆலயத்தை தொழுது, திருவம்பாடி கண்ணனையும் தொழுது வந்தோம். வழியில் இலவசமாக சூட சூட கஞ்சி கிடைத்தது. குளிருக்கு இதமாக கஞ்சியை சாப்பிட்டு பத்மநாபனுக்கு நன்றியை தெரிவித்துவிட்டு புறப்பட்டோம். வேன் எங்களை 7:25 மணிக்கு திருவனந்தபுரம் இரயில் நிலையத்தில் சேர்த்தது. இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் நான்காம் நடைமேடையில் நின்ற அமிர்தா விரைவு இரயிலில் ஏறினோம். சரியாக  இரவு 08:30 மணிக்கு இரயில் புறப்பட்டது. காலை 4:45 மணிக்கு பாலக்காடு டவுனில் அனைவரும் இறங்கினோம். என்னுடன் வந்த அனைவரும் பேருந்து பிடித்து கோவை செல்ல சென்றுவிட்டனர். நான் அங்கேயே ஒரு மணி நேரம் காத்திருந்து பாலக்காடு -திருச்சி விரைவு‌ இரயிலில் பயணித்து போத்தனூரை அடைந்து 30/12/2023 அன்று காலை 8:30 மணிக்கு மீண்டும் வீட்டை அடைந்தேன். ஜனார்தன ஸ்வாமியை காணாத வருத்தம் ஒருபுறமிருந்தாலும், மற்ற இடங்களை ஒரே நாளில் கண்ட மகிழ்ச்சி ஆறுதலளித்தது. மொத்தத்தில்,வர்கலா சிவகிரி பயணத்தில் பல அனுபவங்களை பெற்றேன். வழியில் அறியாமல் இருந்த ஒரு சில ஊர்களைப் பற்றி அறிந்துகொண்டேன்.



Tuesday 4 October 2022

திடீர் குருவாயூர் யாத்திரை

 வணக்கம் நண்பர்களே, 


       வலைதளம் பக்கம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காரணம் எழுத ஏதும் கிடைக்கவில்லை. அதே சோறு, தூக்கம், ஏக்கம், வேலை என ஸ்வரஸ்யமாக எதுவும் கிடைக்கவில்லை. 

      ஆனால் தற்போது ஒரு யாத்திரை மேற்கொண்டேன்  அதை குறித்து பகிர்கிறேன். 

      நேற்று அக்டோபர் 3,திங்கட்கிழமை திடீரென எந்த திட்டமிடலும் இல்லாமல் குருவாயூருக்கு கிளம்பி விட்டேன். அது சரி, திட்டமிட்டு கிளம்ப குடும்பமா  குட்டியா... தனிமரம் தனி சுகம். காலை ஏழு மணி அளவில் பையை தூக்கிக்கொண்டு பேருந்துக்கு சென்றேன். சுமார் ஏழரை மணிக்கு உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி 8:30மணிக்கு பாலக்காட்டில் இறங்கி அப்போதே திருச்சூர் பேருந்தில் ஏறினேன். ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு திருச்சூரை 10:30 மணிக்கு அடைந்து பின் குருவாயூருக்கு போகும் பேருந்தில் ஏறி 11:30 மணியளவில் குருவாயூரை அடைந்தேன். அங்கே வேஷ்டி மற்றும் துண்டுக்கு மாறி, கோவிலில் வரிசையில்  நிற்கையில் மணி மதியம் 12:30. இரண்டு மணி நேர காத்திருப்பிக்கு பின் பிற்பகல் இரண்டரை மணிக்கு குருவாயூரப்பன் வராக மூர்த்தியாக தரிசித்து பின் வெளியே வந்தவுடன் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாலை 4:30 மணிக்கு நடை திறப்பார்களாம். பல வண்ண வண்ணக் காட்சிகளைக் கண்ட வண்ணம், (சுவரோவியங்கள்) ஏனென்றால் நான் மிகவும் நல்லவன், நடந்து வெளியே வர ஒலிபெருக்கியில் இலவச மதிய உணவிற்கான அறிவிப்பு வந்தது. ஓசி சோற்றை விடுவேனா? புகுந்து விட்டேன். திருப்தியாக சாப்பிட்டு பின் வந்து பேருந்திலேறி திருச்சூரை அடைந்து அங்கிருக்கும் வடக்குநாதரையும், பரமேற்காவு பகவதியையும் தொழுதுவிட்டு பேருந்து நிலையம் வந்து பார்த்தால் திருச்சூரிலிருந்து உக்கடம் வரையிலான பேருந்து காத்துக் கொண்டிருந்தது. ஜாலியாக ஏறியமர்ந்தேன் 7:30 மணிக்கு. இரவு 10 மணிக்கு உக்கடம் வந்து சேர்ந்து பின் ஒரு உள்ளூர் பேருந்தில் ஏறி வீட்டை இரவு 11:00 மணிக்கு அடைந்தேன். இதில் நான் வியந்தது என்னவென்றால் எல்லாம் தகுந்த நேரத்தில் நடந்தது. மதியம் தரிசனம் செய்ய இயலாமல் போயிருந்தால் மாலை  4:30 மணிக்கு மேல் தான் தரிசனம் செய்திருக்கவியலும். பின் வடக்குநாதரை தரிசனம் செய்ய சமயமிருந்திருக்காது. என்னை யாத்திரை முழுவதிலும் பார்த்தசாரதியாய் வழிநடத்திய கண்ணன் எனது வாழ்க்கையையும் வழிநடத்துவான் என்பதில் சந்தேகமில்லை. நமது திட்டங்கள் பொய்த்துப் போகலாம் ஆனால்  இறைவனது திட்டம் என்றும் பொய்ப்பதில்லை என்பதை நேற்று உணர்ந்தேன். 


Sunday 27 December 2020

பாவமூட்டை

சிறுகதை போட்டிக்கு நான் எழுதிய மூன்றாவது கதை


                                                  

                                                            

 

" என்னடா வெங்காய மூட்டையெல்லாம் வண்டியில அனுப்பியாச்சா" என்று கேட்டபடி வெள்ளை வேட்டி,சட்டையுடன் வந்து நாற்காலியில் அமர்ந்தான் ராமமூர்த்தி. பெயரளவில் தான் ராமமூர்த்திஅவனது தந்தையின் காய்கறி வியாபாரத்தை தானே ஏற்று நடத்தி வந்தான்.அவனது தந்தை தனது கடும் உழைப்பால் காய் கறி வியாபாரத்தை வளர்த்திருந்தார்.எதிர்பாராத விதமாக நேர்ந்த ஒரு விபத்தினால் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, வியாபாரத்தை தான் ஏற்று நடத்தினான் ராமமூர்த்தி. அவனிடம் நிறைய வியாபாரிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவர். "என்னப்பா கண்ணப்பா மூனு மாசமா வட்டி வரல, வீட்டுப் பத்திரம் ஞாபகம் இருக்குதா?" என்றான் ஒரு வியாபாரியிடம்." அண்ணே, மழையில சரியா வியாபாரமே இல்லண்ண, கொஞ்சம் பொறுங்கண்ண, அடுத்த மாசம்..." என்றிழுத்த வியாபாரியிடம் " அப்படியா, சரிப்பா... அடுத்த மாசமே குடு ஆனா வட்டிக்கு வட்டியா சேர்த்து வரணும்" என்றான். அந்த வியாபாரி " ஐயா....."என அழுதவாரே இழுத்தான் அந்த அப்பாவி வியாபாரி." "அது சரி...உன் கஷ்டம் உனக்கு என் கஷ்டம் எனக்கு சரி ஒன்னு செய்யலாம் உன் வீட்டில் ஒரு சிட்டிருக்கே அதை என்னிடம் வர சொல்லு கணக்க தீத்துபுடலாம்" சற்றும் இரக்கமில்லாமல் அனைவரின் முன்னிலையிலும் பச்சையாக கூறினான் ராமமூர்த்தி. இதனை கேட்ட வியாபாரி அழுது கொண்டே போய் அவமானம் தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 

    ராமமூர்த்தி தான் அவர் தற்கொலைக்கு காரணமென தெரிந்திருந்தும் விலை போன காவலர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. பாவம் அந்த குடும்பம் நிர்கதியானது.ஊரில் காய் கறி வியாபாரிகளுக்கு அவனால் மிகுந்த இடையூறுகள் ஏற்பட்டன.  ராமமூர்த்திக்கு  மந்திரி செல்வாக்கு கூட அதிகம். தன்னிடம் இருக்கும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அவ்வூரில், அவனிடம் மட்டுமே அனைத்து சில்லரை வியாபாரிகளும் காய் கறிகளை வாங்கும் நிலையை ஏற்படுத்தி விட்டான். விலையையும் கூட்டி அநியாயம் செய்து கொண்டிருந்தான். எதிர்த்துக் கேட்டவர்களுக்கு தந்திரமான முறையில் தொல்லைகள் கொடுத்து அவர்களைக் கடன் வாங்கத் தூண்டிடுவான். 

   

   ஒரு கட்டத்தில் அவனிடம் கடன் வாங்கியவர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வளவு அக்கிரமங்களைச் செய்யும் அவனை கேட்க மக்கள் எவரும் துணியவில்லை. தனது ஊர் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சொந்த காரர்களுக்கு மட்டும் நல்லது செய்து, ஊர் உயர் பதவிகளில் அந்த படித்த இளைஞர்களை அமரவைத்து தனது மகுடிக்கு ஆடும் பாம்புகளாக அவர்களை வைத்திருந்தான். அவர்களின் மூலம் பல நிலம் சம்பந்தப்பட்ட அரசாங்க வேலைகளை தானும் சாதித்துக் கொண்டு இருந்தான். இதுபோக,  ஊரில் அதிக வட்டிக்கு தன் பணத்தை விட்டு வியாபாரம் செய்தான். வட்டி கட்ட இயலாத சிறு வியாபாரிகளின்  நிலங்களை கையகப்படுத்தினான். இன்னும் கொடுமை என்னவென்றால் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்களை சீரழித்தான். இவ்வாறு ஒரு ஏகாதிபத்தியம் போல தன் அரசியல் பலத்தாலும் பண பலத்தாலும் ஊரையே தனது ஆளுகைக்குக் கீழ் வைத்திருந்தான் ராமமூர்த்தி. 


     அவன்  பல அநியாயங்களை அரங்கேற்றிய வண்ணமிருந்தான்.ஒருமுறை, ராமமூர்த்தி தனது அறையில் வேறொரு பெண்ணை அணைப்பதை அவன் மனைவி கண்டுவிட்டாள். அவனது அநியாயங்களை பொறுக்கமுடியாமல்  அவனது மனைவி அவனை விட்டு விலகி தன் தந்தை வீட்டிற்கே சென்றுவிட்டாள். ராமமூர்த்தியின் கொடுமைகள்    இறைவனுக்கே பொறுக்கவில்லை போலும். அவனுக்கு குழந்தைகளே இல்லாமல் போனது. அவன் போகாத கோவில்கள் இல்லை பார்க்காத மந்திரவாதிகள் இல்லை.  .ராமமூர்த்தி சுடுகாட்டு வெட்டியான் ஆறுமுகத்தைக்கூட்டாக வைத்துக்கொண்டு இரவில் இருவரும் மது அருந்துவார்கள். அப்போது வெட்டியானின் தேவைகளுக்காக நிறைய பணம் தருவான் ராமமூர்த்தி.வெட்டியானை பொறுத்தவரை ராமமூர்த்தி தான் அவனுக்கு தெய்வம்.வெட்டியானின் மகனுக்கு அரசு வேலையும் வாங்கிக்கொடுத்தான்.  


      தற்கொலை செய்த நபரின் இறுதி சடங்கிற்கு மாலையுடன் மயானத்துக்கு அவன் சென்ற போது அவனை ஒரு பெண் " நீயெல்லாம் விளங்கவே மாட்டாய். சத்தியமா சொல்லுறேன் என் புருஷன் உன்கிட்ட கைநீட்டின பாவத்துக்கு அவர நோகடிச்சு கொன்னுட்டியேடா பாவி" என்றபடி சுடுகாட்டு மண்ணை தூற்றி சாபமிட்டாள். அடுத்த நாள் காலையே அதிர்ச்சியான செய்தியொன்று அவனுக்கு காத்திருந்தது. வழக்கம் போல் காலையில் எழுந்து தனது நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்தான். மேஜை மீதிருந்த அவனது அலைபேசி அலறியது.  அழைப்பை ஏற்றவனுக்கு திடீர் அதிர்ச்சி. 


    மறுமுனையில்,"அண்ணே, சரக்கு வந்த வழியில மல செக்போஸ்ட் ல போலீஸ் கிட்ட நம்ம லாரி மாட்டீருச்சு அண்ணே. நான் தப்பிச்சோம் பிழச்சோமென காட்டிற்குள் புகுந்து  வந்து உங்களோட பேசறேன். நம்ம பசங்க வசமா போலீஸ் கிட்ட மாட்டிகிச்சு"என்றான் ராசு.  "காசு குடுக்க வேண்டீது தேன" என்றான் ராமமூர்த்தி. "அண்ணே, யாரோ புது ஆளாம்."  "சரி நீ தலைமறைவாகிடு.நான் பாத்துக்கிறேன்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். விரைந்து தனக்குத் தெரிந்த காவல்துறை உயரதிகாரியை தொடர்பு கொண்டு விஷயத்தை கூற முற்பட்டான். ஆனால் அந்த அதிகாரியின் இடத்தில் வேறொரு அதிகாரி நியமிக்கபட்டிருந்தார். அழைப்பு துண்டிக்கப்பட்டது. இது போல் பல நிகழ்ந்தன. 

 

        சரக்கு வரத்து குறைந்ததால் அவனது வியாபாரத்தில் படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தான். இதற்கு ஏற்றாற்போல்,அவனது வாடிக்கையாளர்களும் மெதுவாக அவனை ஏமாற்ற ஆரம்பித்தார்கள். இதனால் மனமுடைந்த ராமமூர்த்தி மந்திரவாதியொருவரை வரவழைத்து தனக்கு ஏன் தற்காலத்தில் இவ்வளவு துன்பங்கள்  என்பதையறிய முயற்சி செய்தான். அந்த மந்திரவாதியோ ராமமூர்த்தியிடம் அந்த பூஜை இந்த பூஜை யென நிறைய பணத்தைக் கொள்ளையடித்து சென்றுவிட்டான்.

    

       ராமமூர்த்தி மிகுந்த வருத்தமடைந்தான்.அவனை சுற்றியிருந்த கூட்டம் அவனிடம் செல்வம் குறைய தொடங்கியதையறிந்து அவனிடமிருந்து படிப்படியாக விலகிச் செல்லலாயினர். அவனது செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.அவனால் பாதிப்படைந்த பலர் அவனை பழிவாங்க துடித்தனர். படிப்படியாக தனது சொத்துக்களை இழந்தான்.  போதாக்குறைக்கு வயோதிகம் வேறு அவனை படுத்தியெடுத்தது.மருத்துவமனைக்கு நடந்து நடந்து அவன் கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம். 

       

       ஒருநாள், ராமமூர்த்தி தனது வீட்டு முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்து சற்று கண் வளர்ந்தான். அப்போது அவனால் பாதிக்கபட்ட ஒருவன் அவன் மீது கல்லெறிந்தான் அந்த கல் ராமமூர்த்தியின் நெற்றியில் பட்டு ரத்தம் கசிந்தது. "ஐய்யோ அம்மா..." ராமமூர்த்தி கூச்சலிட்டுக்கொண்டே நிலத்தில் சரிந்தான். அவ்வழியாக வந்த வெட்டியானின் மகன் கலைச்செல்வன் ராமமூர்த்தியை மருத்துவமனையில் சேர்த்தான். வெட்டியானும் விசயமறிந்து மருத்துவமனைக்கு விரைந்தான். 


         ராமமூர்த்தியை அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர். "ரத்தம் அதிகமா போனதால...மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிரமம் இருக்கு, வி வில் ட்ரை அவர் பெஸ்ட்" மருத்துவர் கூறி சென்றார். நாட்கள் கடந்தன ராமமூர்த்தியின் உடல் நிலை சற்று சீரடையவே அவனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அறைக்கு மாற்றினர். அறையில் ராமமூர்த்திக்கு நினைவு திரும்பிடவே, தான் செய்த தவறுகளை எண்ணிவருந்தினான்.  ராமமூர்த்தி கண் திறந்ததைக்கண்ட ஆறுமுகம் சற்று ஆறுதலடைந்து "சாமி ஏதாது ச்சாப்பிட்ரீகளா?" என கண்ணீரோடு கேட்டான்.   ராமமூர்த்தி ஏதும் பேசவில்லை. அவனது கண்களில் கண்ணீர் குளம் போல தேங்கியிருந்தது. தனது வாழ்க்கையை ஒரு முறை திரும்பிப்பார்த்தான். எத்தனை கொடுமைகள், எத்தனை அக்கிரமங்கள். கோரமான முகமொன்று அவன் கண் முன் தோன்றியது. தனது நிலையை கண்டு  தானே   அஞ்சி நடுங்கினான் ராமமூர்த்தி.


       "ஆறுமுகோ, இனி நான் பொழக்கமாட்ட. எனக்கு எஞ்சி இருக்கறது என் வூடு மட்டுந்தே.அத என் மனைவிக்கு அப்புரோ நீ எடுத்துக்கோ. ஊ மவன்  கிட்ட சொல்லி நா அடமானத்துக்கு அப்பாவி ஜனங்க கிட்ட புடுங்கி வைச்ச பத்தரத்த யெல்லா அவுங்கவுங்க கிட்டயே கொடுத்திட சொல்லு.இப்புடியாது என்னோட பாவ மூட்டையோட பாரோ கொஞ்மாவது குறயுதானு பாக்கலாம்" என்று சொல்லி கண்களை அகன்று விழித்தான் ராமமூர்த்தி. ஆறுமுகம் கதறிக்கொண்டு மருத்துவரை அழைத்து வருவதற்குள் ராமமூர்த்தியின் உயிர் பிரிந்திருந்தது. 


       காரியத்திற்கு பின்னர், இராம மூர்த்தியின் மனைவியின் துணைகொண்டு  ராமமூர்த்தி ஏற்கனவே யார் யாரிடம் வரவு செலவு என்ற விஷயங்களை எழுதி வைத்திருந்த குறிப்பேட்டை பெற்று, அதனைக் கொண்டு ஆறுமுகமும் அவன் மகனும் நேர்மையாக செயல்பட்டு பத்திரங்களைப் பத்திரமாக அவரவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். 

       

      இரண்டு நாட்கள் கழித்து அவ்வூர் டீக்கடை பெஞ்சில் சிலர் அமர்ந்திருக்க, "ராமமூர்த்தி கத இப்படி முடிஞ்சு போச்சே" என ஒருவர் கிசுகிசுக்க மற்றொருவர் அதற்கு "ஆமாப்பா, எப்படியோ என்னோட பத்திரம் வந்திருச்சு..இனிமே கொல சாமி சத்தியமா கடனே வாங்கமாட்டேனப்பா சாமி" என நிம்மதி பெருமூச்சு விட்டான்.


        டீ கடையில், " ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கத உனக்கு தெரியுமா" என்ற பாடல்  சன்னமாக ஒளித்துக்கொண்டிருந்தது. 

                  

                                          ***முற்றும்***