Sunday 31 May 2020

விடியலும்,வேலையும்




வணக்கம் நண்பர்களே,

                                 தற்போது என் மனம் கொஞ்சம் பாரமாக இருக்கிறது.ஏனென்றால் என்னுடன் நன்றாக உரையாடிக் கொண்டிருந்த ஒரு பெண் திடீரென என்னை ப்ளாக் செய்துவிட்ட சோகம் தானது.

                       உண்மைதான்,ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவுக்கு ஏங்கும் மனிதனின் கவலையும் எனது கவலையும் ஒன்று தான்.


                    தினமும் காலையில் எழும்போது அனைவரும் ஒவ்வொரு திட்டங்களோடு எழுவோம். அதுவும் இந்த அவசரகதி வாழ்க்கைச்சூழலில் பல எதிர்பார்ப்புக்கள்,ஏமாற்றங்களோடு தான் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.

                 பலரும் பல்வேறு திட்டங்களை வைத்திருப்பர்.

     அன்று எனக்கென்றிருந்த திட்டம் காய்கறி சந்தைக்குச் சென்று காய்கறிகளை வாங்கி வருவது. காலை, நேரமே சென்றால் தான் காய்களை சுத்தமாக வாங்க இயலும். எனவே, சந்தைக்குப் செல்லும் போதெல்லாம் நேரமே எழுந்து சென்றுவிடுவேன்.

           ஆனால் அன்று கொஞ்சம் அதிகமாக தூங்கிவிட்டேன். தூக்கத்திலிருந்த என்னை என் அம்மா வந்துதான் எழுப்பினார்.


       எப்போதும் நான் தூக்கத்திலிருந்தால் அம்மா அவ்வாறு எழுப்பமாட்டார்.

     அன்று ஒரு நிகழ்வு நேர்ந்திருந்தது. அந்நிகழ்வு யாதெனில்,
 வீட்டுக்கு வெளியே தோட்டத்தில் ஓர் செண்பகமரமுள்ளது.
     
      அம்மரத்தின் கீழ் நிழலிருக்கும். நீர் போவதால் மண் ஈரமாக இருக்கும்.

     அங்கு ஒரு நாய் இறந்து கிடந்தது.

     அதை எனக்கு அறிவுறுத்தவே என்னை அவர் எழுப்பினார்.

       நான் மெதுவாக எழுந்து நடந்து வெளியே வந்து மரத்தின் கீழிருக்கும் நாயைக் கண்டேன்.

                 காலை தந்த வேலை என கைகளில் உறையணிந்து கொண்டு,முகத்திற்கு கவசமொன்று அணிந்து வெளியில் வரும்போது ஒரு சிந்தனை, ஒருவேளை அன்று கர்ணன் கவச குண்டலங்களோடு பிறந்தது போல் இப்போது பிறக்கும் குழந்தைகள் முகக்கவசத்தோடு பிறப்பார்களோ என தோன்றியது. ம்ம்ம் வேண்டாம்.

                மருத்துவமனையில்,         அவற்றையும் பிடுங்கி வியாபாரம் செய்துவிடுவார்கள் எனவும் தோன்றியது. நான் முகக்கவசமெல்லாம் அணிவதில்லை. எல்லாம் கைக்குட்டை தான். முகக்கவசமும் அதுதான் சளிக்கவசமும் அதுதான். "நின்றால் குடையாம் இருந்தால் சிங்காசணமாம் நெடு கடலில் என்றும் அணையாம்" என்பதைப் போல.

        நாய் தூங்குவது போல் கிடந்தது. அதன் கணத்தவுடல் சேற்றில் சற்று கெட்டியாகியிருந்தது.

      பகவானே.. கெட்டி மேளம் கேட்க செய் என்றால் எதை எதையோ காட்டுகிறாய்.
அவனும் கெட்டி காரன் தான்.


 மேலும் காலம் தாழ்த்த,தாழ்த்த நாயினுடல் தாங்காது.

      எனவே அதை அப்புறப்படுத்த வேண்டும்.

      எனது வாகனத்தை வெளியே எடுத்து நிறுத்தி சாக்குப்பைகளை எடுத்துக் கொண்டு எனது மொழுக் மொழுக் உடலால் நாயை தூக்க முற்பட்டபோது என்னாலதை தூக்கவியலவில்லை.

       காரணம் அந்நாய் சேத்தில் கிடந்தது.

      ஒரு வழியாக அதையெடுத்து எனது வாகனத்தில் கிடத்தினேன்.

         வாகனத்தை செலுத்தினேன்.

   வழியில் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த ஆண்கள் சிலர் என்னைப் பார்த்து நகைத்தனர்.

       நான், அவர்களில்லத்திலும் இதே போன்ற பணியை அவர்களும் செய்திருக்கக் கூடும் என்றெண்ணி ஆறுதலடைந்தேன்.

      பின் ஆட்களில்லாத பகுதியில் அந்த நாயைப்  போட்டு விட்டு வந்தேன். 

          வீட்டிக்கு வந்து வாகனத்தை நன்றாக கழுவி,நானும் குளித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.


               அம்மா எனக்கு ஆவி பறக்க ப்ரூ காஃபியை நீட்டினார்.

      நான் திருப்தியாக கபக் கபக் என்று காஃபியைப் பருகினேன்.

         மனிதன் இறந்தால் என்ன மரியாதையளிக்கப் படுகிறது. தடபுடலான விருந்து, இறப்பு,வாரிசு என எத்தனை சான்றிதழ்கள்.

       அதுவும் அகால மரணமானால் இறந்தவரின் குடும்பம் படும் பாடு இன்னும் மோசம்...

          மனிதவுடல் தாங்கி இப்புவியில் பிறந்த நமக்கு ஏதோ ஒருவகையில் இறைவன் நன்மையே செய்திருக்கிறார்.

          இவ்வாறு எண்ணி  காலை சிற்றூண்டிக்கு தயாரானேன்.

     எனது அன்னை  சூடான ஆப்பத்தை கொண்டைக்கடலை குளம்புடன் பரிமாறினார்.

            நான் ஆனந்தமாக உணவுண்ண ஆரம்பித்தேன்.
     
                   ஆறு ஆப்பங்கள் ஸ்வாஹா! அவ்வளவு அயர்ச்சியாக இருந்தது.


                


                    

10 comments:

  1. அடடா.... இறந்து போன நாய் - முனிசிபல் கார்ப்பரேஷன் ஆட்கள் வரமாட்டார்களா? அவர்கள் சரியான முறையில் டிஸ்போஸ் செய்ய முடியும். ஆனாலும் சில சமயங்களில் நாமே செய்ய வேண்டியிருக்கிறது. வேறு வழியில்லாதபோது செய்து தானே ஆகவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சார்.. அவர்கள் எப்போது வருவார்கள் எப்படி வருவார்கள் என‌ யாருக்கும் தெரியாது..

      Delete
  2. என்னங்க ? இறந்த அந்த நாயை அங்கேயே குழி தோண்டி புதியது இருக்க முடியாதா? மற்றும் சற்று தூரம் தள்ளி யாரும் இல்லாத இடத்தில போட்டு விட்டேன் என்று சொன்னீர்கள். அது சரியான காரியமா?

    அறியாமல் கேட்கின்றேன், தவறாக நினைக்க வேண்டாம் .

    ReplyDelete
    Replies
    1. ஆம் சார். தவறு தான். என்ன செய்வது எங்கள் ஊரில் என்னையுட் பட பலருக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. மேலும் அந்த நாயை தூக்குவதற்கே சிரமமாக இருந்தது. நாயை சற்று நேரத்தில் மாநகராட்சி வேன் சுமந்து சென்றது. நாமே நேரடியாக ஸ்பாட்டில் இருந்தால் கொஞ்சம் செலவாகும்.

      Delete
  3. சரிதான். சில விடியல்கள் இவ்வாறு சோகமாக விடிகின்றன.

    ReplyDelete
    Replies
    1. என்ன‌ செய்வது அரவிந்த்...எதுவும் நாம் முடிவு செய்து நடப்பதில்லையே.

      Delete
  4. நவீன் இன்றுதான் உங்கள் பதிவை வாசித்தேன். ஹையோ பாவம் அந்த பைரவர். இன்று காலை கேரளத்தில் ஒரு யானையை பாவம் அதுவும் கர்ப்பவதியான ஆனை செல்லத்தை மக்கள் அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து அதற்கு உண்ணக் கொடுத்து அது பாவம் தொண்டை எல்லாம் புண்ணாகி அலைந்து உயிர் விட்டிருக்கிறது அதை வாசித்து மனம் வேதனைப்பட்டு வந்தால் இங்கும் ஒரு நாலுகால் செல்லம் பைரவரின் இறப்பு பற்றிய செய்தி.

    சில சமயம் இப்படித்தான் விடியலே சோகத்தில் தொடங்கும் போல.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருந்துகிறேன் மேடம். தங்களை சோகப்படுத்தியதற்கு.

      Delete
  5. வித்தியாசமான விடியல்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு எல்லாமே வித்தியாசமாத்தான் நடக்கிறது.

      Delete