Sunday 24 May 2020

நடை.... கடை..ஆஹா ஓசி வடை!



நமஸ்காரம் நண்பர்களே,

                               எனது முதுகலை முதலாமாண்டு காலங்களில் நான் திருப்பதிக்குப் புதிதாக இருந்ததால் எனக்கு அவ்வூரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருந்தது.
சமயம் கிடைக்கும் போது அந்த சாலை வழியே அந்த பாதை எங்கு செல்கிறது என நடக்க ஆரம்பித்தேன்.

     கல்லூரி, காலை பத்து மணியளவில்தான் தொடங்கும். ஆகையால் நான் காலையில் நேரமே எழுந்து பல் துலக்கி விட்டு நடைபயிற்சி சென்று விடுவேன். H- ப்ளாகிலிருந்து கிழக்குப் பக்கமாக ஓர் அடர்ந்த வனம்   போன்ற சாலையில் நடந்தால் ஸ்ரீ வேங்கடேஸ்வரா மருத்துவமனை(SVIMS) வரும். 

       அந்த வழிதான் எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் போகும் வழியில்  மருத்துவ மாணவியரின் விடுதிகளுள்ளன. பல ஏழை எளிய மக்கள் மருத்துவமனை முன் கண்களைக் கசக்கிய வண்ணம் நிற்பதெல்லாம் கண்களில் படும்.
           
           இரண்டு பிணவறைகளைக் கடந்துதான் செல்வேன்.புதிதாக பயிற்சி எடுக்கும் செவிலிய மாணவிகள் வரிசையாகச் செல்வர். எனக்கு கல் தடுக்குவது கூட தெரியாமல் நடப்பேன். ஆனால் அவர்கள் யாருமென்னை மதித்ததேயில்லை. இதுவொரு வேதனையாக இருக்கும்.

          அப்படியே, மிருதுவான நடையால் மருத்துவமனை வளாகத்தைக் கடந்து  அலிப்பிரியை அடைவேன். அங்கு ரோட்டோரம் இட்லிகார அக்கா நல்ல பழக்கம். தமிழ் பேசுவார்கள். மலைக்கு வரும் யாத்திரிகர்கள் அந்த கடையில் இட்லி, வடையென சாப்பிட்ட பின் மலையேறுவார்கள்.

          நான் பல நாள் அவ்வழியாக சென்றும் ஒரு நாள் கூட அங்கு சாப்பிட்டதில்லை. ஒரு நாள் அந்த இட்லி கடையக்கா என்னைக் கூப்பிட்டு
சூடான வடைமேல் சாம்பார் ஊற்றிக்  கொடுத்தார்.

          ஆனால் நான் சாப்பிட தயங்கிக்கொண்டு நின்றேன்.அப்போது அந்த அக்கா, "காசெல்லாம் வேண்டாம் சாப்பிடுங்க தம்பி"னு சொன்னாங்க. அதை கேட்ட நான் மகிழ்ச்சியுடன் வடையை நன்றாக சாம்பாரில் தவட்டி புரட்டி சாப்பிட்டேன். சாம்பார் மீதமிருக்க இன்னொரு வடையும் கிடைத்தது.
  
            நான் இன்னொன்று கொடுத்திருந்தாலும் சாப்பிட்டிருப்பேன். ஆனால் வியாபாரி அக்காவின் நலன் கருதி முடித்துவிட்டேன்.எதற்கு வம்பு,நானும் காசு கொடுக்கப் போறதில்லை. அக்காவின் வியாபாரமும் கெடக்கூடாது. ஏற்கனவே, நான் இரண்டு வடையை விழுங்கிவிட்டதை ஒரு மொட்ட கவனிச்சுட்டான். என் கணிப்பில், அவன் நிச்சயம் அக்கா புருஷனா இருக்க வாய்ப்பில்லை.அதனால் ஆறுதலடைந்தேன்.

         அக்காவிற்கு நன்றி சொல்லிவிட்டு நடையை தொடர்ந்தேன்.

          இப்போது நான் அலிப்பிரியை அடைந்து விட்டேன். இவ்விடம் தான் யாத்திரிகர்கள்  மலையேறுமிடம்(சாமி கும்பிட). கம்பீரமாக பக்தர்களை வரவேற்கும் நித்யசூரியாம் கருடனின் சுதை.  

      நானங்கிருந்தே திருமலையை சேவித்துக் கொள்வேன்.

     நம்மாழ்வாரின் பாசுரப்படி, " பரன் சென்று சேர் திருவேங்கடமாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே. திருமலையை வணங்கினாலே நம் கர்மவினைகள் அழியுமாம்.

         வடைக்கு காசு கொடுக்காத வினையும் அழியவேண்டுமென  எண்ணிக் கொண்டு மேல நடப்பேன். அடிப்புளி என்ற தமிழ் சொல் தான்
அலிப்பிரி என மருவியதாம்.

           பெரிய திருமலை நம்பி  காலத்தில் அதாவது பத்தாம் நூற்றாண்டில் அங்கோர் பெரிய புளிய மரமிருந்ததாம். அந்த புளியமரத்தின் பெயரிலேயே அவ்விடம் அவ்வாறு விளங்கியதாம்.

           தொடர்ந்து மலைச்சாரலில் நடந்தால், புகழ்பெற்ற  பாரதீய வித்யா பவன் பள்ளியின் திருப்பதி வளாகம். அங்கு சற்று நின்று உடற்பயிற்சி என்ற பெயரில் குனியமுடியாமல் குனிந்து நிமிர்ந்து சாலையில் வேடிக்கை காட்டிவிட்டு மீண்டும் வந்த வழியே நடப்பேன். 
              வேறு வழியில் செல்லலாம்தான் ஆனால், செவிலிய மாணவிகள், மருத்துவ மாணவிகளின் தரிசனம் அவ்வழியில் கிடைக்காது. மீண்டும் மருத்துவமனை வழியாகத் தளர் நடை நடந்து H-ப்ளாக்கை அடைவேன்.

              இப்படியாக, காலை 6:30 மணிக்குத் தொடங்கும் நடைப்பயிற்சி 8:15 மணி வரை நீடிக்கும். பின் விடுதிக்கு வந்தால் மரத்தடி திண்ணையில் நண்பர்கள் அமர்ந்திருப்பர். அவர்களுடன் சற்று அளவலாவி விட்டு அறைக்கு வந்து குளிர்ந்த நீரில் குளியல் போட்டு, தயாராகி, நெற்றியில்  திருமண் துளங்க வகுப்பிற்குச் செல்வேன்.இந்த நடைமுறை இரண்டாமாண்டும் தொடர்ந்தது. ஆம். நடைப்பயிற்சி மிகவும் அவசியமானதல்லவா நண்பர்களே?


      

            

       

8 comments:

  1. ஆயிரம்தான் இல்லத்திலேயே சுவையான சாப்பாடு இருந்தாலும் திருட்டு மாங்காய், ஓசி வடை எல்லாம் சுவையானவையே. நடைப்பயிர்ச்சியும் கண்ணுக்குக் குளிர்ச்சியான இயர்க்கை அழகும் மிகச்சிறப்பே. மருத்துவ மாணவிகளும் இயர்க்கையின் படைப்புகள் தானே?

    ReplyDelete
    Replies
    1. ஆம். அவ்வப்பொழுது உடலாரோக்யத்தை அவர்களின் ஆலோசனைகளுடன் பராமரித்துக் கொள்ளலாம் அல்லவா?

      Delete
  2. Replies
    1. மனம் திறந்து பேசத்தான் பதிவுலகத்தில் நுழைந்தேன் நண்பரே.

      Delete
  3. Replies
    1. Iam glad that you called me boy because many call me only as 'uncle'

      Delete
  4. நடை பயிர்ச்சி நல்லா நடந்ததோ இல்லையோ நல்லாவே சைட் அடிச்சியிருக்கீங்க. ஓ! சாரி சாரி பூக்களை ரசிச்சியிருக்கீங்க.

    ReplyDelete
  5. அருமையான தலைப்பு. பேசாமல் உன்னுடைய அனுபவங்களை எல்லாம் கதை வடிவில் தொகுத்து சிறுகதைத் தொகுப்பாக கொண்டு வரலாமே

    ReplyDelete