Tuesday 16 June 2020

கண்ணிநுன்சிறுதாம்பு


வணக்கம் நண்பர்களே,
   

    சென்ற வைணவம் பதிவில் நாலாயிரத்தை பெற்றுக் கொடுத்த ஸ்ரீமந் நாதமுனிகளின் சிறப்பைப் பார்த்தோம். இப்பதிவில் நாதமுனிகள் உருச்சொன்ன 'கண்ணிநுன்சிறுதாம்பு'  என்ற பதினோரு பாசுரங்களைப் பற்றிப் பார்ப்போம்.



        நாதமுனிகள் ஏன் அதை 12000 முறை உருச்சொன்னார். எவ்வாறு நம்மாழ்வாருடன் 'கண்ணிநுன்சிறுத்தாம்பு' தொடர்புடையது என்பதை இப்பதிவில் காணலாம்.


       நம்மாழ்வார் திருவவதாரம் செய்ததோ இப்புவியில் கண்ணன் தனது அவதாரத்தைப் பூர்த்தி செய்து ஸ்ரீ வைகுண்டம் போனதிலிருந்து சரியாக இருபத்தியோரு நாட்கள் கழித்து அவதரித்தாராம்.

   எனில், கண்ணன் புறப்பட்டுச் சென்றவுடனே த்வாபர யுகம்முடிந்து கலியுகம் தொடங்கி விட்டது. ஆகையால் நம்மாழ்வாரின் அவதாரம் கலியுகத்தின் தொடக்கத்தில் ஏற்பட்டது.

     நம்மாழ்வார் பிறவிலேயே ஞானியாகப் பிறந்தார். குருகூரில் ஆதிசேஷன் அம்சமாக விளங்கும் திருப்புளியாழ்வாரின் பொந்தில் குழந்தை தவமியற்றியது. 16 வருடங்கள் தவத்தில் கழித்த குழந்தை தற்போது வாலிபன். திருப்புளியாழ்வாரின் கீழ் தவத்தில் ஆழ்ந்திருக்கும் சடகோபனை பக்தர்கள் தரிசித்து செல்வர். 

     இந்த 16 ஆண்டுகளின் தப ஜ்வாலை ஆகாயத்தை தொட்டு பிரகாசித்தது. இன்னொரு சூரியன் என்று கூறினால் அது மிகையாகாது.

  மதுரகவியாழ்வார் நம்மாழ்வாருக்கு பல வருடங்களுக்கு முன்பு திருவவதாரம் செய்தவர். இவரின் அவதாரஸ்தலம் குருகூருக்கு அருகே திருகோளூர் என்ற வைத்தமாநிதிப் பெருமாளின் ஆஸ்தானம்.

    மதுரகவிகள் கண்ணன் வாழ்ந்த ஸ்தலங்களிலே அதாவது வடநாட்டிலே கைங்கர்யம் செய்து வந்தார். அப்போது அவர் தூய பெருநீரான யமுனையின் கரையில் கண்ணனின் நினைவோடு இருக்கையில் தெற்கே ஓர் பெரும் ஜோதி தெரிவதைக் கண்டார்.

     அச்சோதியால் ஈர்க்கப்பட்டு தென் திசை நோக்கி பயணித்தார் அச்சோதி நீண்ட தூரம் தெற்கே சென்றுகொண்டே இருந்ததாம். ஒருவழியாக ஸ்ரீ ரங்கம் வந்து சேர்ந்த அவருக்கு வியப்பு மேலிட்டது. அச்சோதி மேலும் தெற்கே தெரிந்தது. அரங்கனை சேவித்து மேலும் தெற்கு நோக்கி விரைந்தார்.

     சோதியின் திசை நோக்கி பயணித்த மதுரகவியாழ்வார் தனதூரான திருகோளூரை அடைந்து வைத்தமாநிதியை மங்களாசாசனம் செய்து பின் அச்சோதியை தொடர அச்சோதி திருக்குருகூரில் நம்மாழ்வாரிடம் ஒன்றி மறைந்தது.

     மதுரகவியாழ்வார் தவத்தில் ஆழ்ந்த சடகோபனை வணங்கி நின்று அவரின் கடாக்ஷத்தைப் பெற, ஓர் கேள்வியெழுப்பினார்.

    " செற்றதின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எத்தே கிடக்கும்?" என்றார்.

    சடகோபமாமுனி தன் தவத்திலிருந்து 16 வருடங்களுக்குப் பின் மீண்டு தன் தாமரைக்கண்களைத் திறந்து புன்முறுவல் பூத்து திருவாய் மலர்ந்து
ஞான சொல்லை உதிர்த்தார்.


" அத்தை தின்று அத்தே கிடக்கும்" என்றார் நம்மாழ்வார்.

   இதைக் கேட்ட மதுரகவிகள் ஆழ்வாரை வணங்கி தனக்கு உபதேசிக்க வேண்டினார்.

       செற்றது என்றால் இந்த ப்ரபஞ்சம். சிறியது என்றால் ஜீவாத்மா. இந்த ப்ரபஞ்சத்திற்கு ஜீவாத்மா வந்தால் ப்ரபஞ்சத்தில் கர்மங்களைச் செய்து இங்கேயே உழலும் என்பது இதன் அர்த்தமாக பெரியோருரைப்பர். செற்றது என்பது பகவத் விஷய ஞானம் ஏற்படாது இருப்பதைக் குறிக்கும்.

     அன்று தொடக்கமாக மதுரகவிகள் நம்மாழ்வாரோடு பதினாறு ஆண்டுகள் இருந்து அவரை தவிர வேறு தெய்வத்தை அறியாதவராக தன் ஆச்சாரியெனே எல்லாம் என இருந்தார்.

   இந்நிலையில் நம்மாழ்வாரின் சிறப்பையும் அவரது கருணையையும் பதினோரு பாசுரங்களாகப் பாடினார். அப்பாசுரங்களில் தனக்கு பெருமாளைத் காட்டிலும் நம்மாழ்வாரே தனக்கு இனிமையானவர் என பாடுகிறார்.

   பதினாராண்டுகள்  வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் பாசுரங்கள் அனைத்தையும் கையோலைபடுத்தினாராம்.

    இந்த பதினோரு பாசுரங்களைத் தவிர அவரேதும் பாடவில்லையாம்.

   அந்தாதி வடிவிலிருக்கும் பாசுரங்கள் அனைத்தும் இனிமையானது.

     நாதனுக்கு நாலாயிரத்தை வழங்கியது.
   
  இன்றும் பல பக்தர்கள் கண்ணிநுன்சிறுதாம்பை மட்டுமே சேவிப்பது நாலாயிரம் பாசுரங்களையும் சேவிப்பதற்குச் சமமென நம்புகின்றனர்.

    நம்மாழ்வார் முப்பத்திரெண்டாண்டுகள் வாழ்ந்து பரமபதமடைந்த பின் மதுரகவிகளும் ஆழ்வரைத் தொடர்ந்து பரமபதித்தாராம்.
 
 மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்
      

     

8 comments:

  1. புது தகவல் எனக்கு. நன்றி. அந்த வழி காட்டும் ஒளி யேசுபெருமான் பிறப்பு சம்பவத்திலும் வந்திருக்கிறது.

    ReplyDelete
  2. ஆத்மாவின் பரிசுத்த ஒளி ஒன்றே எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும்

    ReplyDelete
  3. மதுரகவியாழ்வாரினைப் பற்றிய உங்கள் பதிவு சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. " செற்றதின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எத்தே கிடக்கும்?" என்றார்.

    சடகோபமாமுனி தன் தவத்திலிருந்து 16 வருடங்களுக்குப் பின் மீண்டு தன் தாமரைக்கண்களைத் திறந்து புன்முறுவல் பூத்து திருவாய் மலர்ந்து
    ஞான சொல்லை உதிர்த்தார்.


    " அத்தை தின்று அத்தே கிடக்கும்" என்றார் நம்மாழ்வார்.//

    இதைச் சொல்லாமல் நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வரைப் பற்றி சொல்லிக் கடந்துவிட முடியாது.

    சரியா கொடுத்திருக்கீங்க விளக்கம். வயது கடந்தும் புத்தி பக்குவம் அடையவில்லை என்றால் வாழ்க்கைக் கஷ்டங்களில் உழன்றுகொண்டுதான் இருக்க வேண்டும் என்ற ஒரு வாழ்வியல் தத்துவமே...

    இந்த சின்ன வயசுல அழகா எழுதறீங்க நவீன். வாழ்த்துகள் பாராட்டுகள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஆச்சாரியார் அனுக்கிரஹம் மேடம். ஆழ்வார்களைப் பற்றியும் நாயன்மார்கள் பற்றியும் அறியாமல் தமிழனாய் வாழ்ந்து என்ன பயனிருக்கப்போகிறது? நன்றி மேடம்

      Delete