Saturday 27 June 2020

சூடி கொடுத்த சுடர்கொடி!


வணக்கம் நண்பர்களே,

     இன்று நாம் கோதை நாச்சியாரைப் பற்றி பார்ப்போம். ஆண்டாள் என்ற திருநாமத்துடன் பிரசித்தமாக விளங்கும் கோதை ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயி பெருமாளின் சந்நிதியருகே அமைந்த துளசி வனத்தில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தார்.

 அவரை விஷ்ணுசித்தரான பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார்.அவர் பூமி தேவியின் அம்சம். பெருமாளின் பிராட்டிமார்களின் ஒருவர் தான் பூதேவி. இந்த பூதேவி தான்  பூமாதேவி என்றும் விளங்குகிறாள்.

   கோதை நாச்சியாரின் அவதாரத்திற்கு ஓர் காரணமுண்டு. அக்காரணத்தை நாமறிந்தால் ஆண்டாளை பற்றின புரிதல் இன்னும் வலுப்பெறும்.

    கஷ்யபர் என்ற ரிஷிக்கு அதிதி மற்றும் திதி என்று இரண்டு மனைவியர் இருந்தனர்.

   அவர்களில் திதிக்கு இரண்டு அசுர பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் இரண்யாக்ஷன் மற்றும் இரண்யகசிபு.

    இவர்களில் மூத்தவன் இரண்யாக்ஷன், கடுந்தவமியற்றி ப்ரம்மனிடம் பல வரங்களைப் பெற்று அதன் மூலம் கர்வம் கொண்டு பூமியை ஓர் பாய் போல சுருட்டி பாதாள லோகத்தினுள்  சிறை பிடித்தான்.

   பூமி தேவி ப்ரம்மாவிடம் முறையிடவே வரமளித்த ப்ரம்மன் மஹாவிஷ்ணுவை தியானித்தார்.

    தியானத்தில் இருந்த ப்ரம்மாவின் மூக்கிலிருந்து ஓர் சிறு பன்றி யொன்று குதித்தது. அது கட்டைவிரல் அளவே இருந்தது.

    பின், ப்ரம்மன் அதைப் பார்க்க பார்க்கவே  மிக பெரிய வராகமாய் அது மாறியது.

   முனிவர்களும், ப்ரம்மதேவனும் அந்த பன்றியின் தாமரைக்கண்களைப் பார்த்து இது மஹாவிஷ்ணுவே என அறிந்து பலவாறு துதிசெய்தனர்.

     தாமரைக்கண்கள் பரதேவதையின் ஓர் அடையாளம். எந்த அவதாரத்திலும் இந்த அடையாளம் மாறாது. 

     மஹாவராஹம் இரண்யாக்ஷனுடன் போர் செய்து  அவனை வதைத்து பூமி தேவியை மீட்டு வெளிவந்தது.

  தனது மனைவியான பூமிதேவியை பெருமாள் தனது இடது தொடையில் அமர்த்திக் கொண்டு காட்சியளித்தார்.

   அப்போது பூமிதேவி பூமியில் வாழும் தனது பிள்ளைகளின் மேல் அக்கறை கொண்டு அவர்கள் பரமனை எளிதில் அடைய வழியை அருளுமாறு பெருமாளிடம் கேட்டார்.

    பெருமாள் நல்லதோர் உபாயத்தை உபதேசிக்கலானார். வராஹ மூர்த்திக்கும் பூமிப் பிராட்டிக்கும் நடந்த விவாதம் ' வராஹ புராணம்' என விளங்குகிறது.

    இதில் பெருமாள் தன்னை மக்கள் எளிதில் அடைய அருளிய மிக முக்கியமான ஸ்லோகம் ஒன்றுள்ளது.

" ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச கீர்த்தனம் ப்ரபதனம் ஸ்வஸ்மை ப்ரசூணார்பணம்"

இதன் அர்த்தம்,

"தூமலர் தூவி தொழுது, வாயினால் பாடி,மனத்தினால் சிந்திக்க" என்று அர்த்தம்.

   அதாவது இறைவனை அடைய அவனை பாடி, அவனைப் பற்றி சிந்தித்து அவனை துதிப்பது என்பதாகும்

    இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின் பொருளை தமிழ் மக்களிடம் உபதேசிக்கவே பூமிதேவி கோதையாக அவதரித்து,
  தானருளிய திருப்பாவையின் ஐந்தாம் பாசுரத்தில் இந்த செய்தியை வைத்தாள்.

    என்றோ கிருத யுகத்தில் வராக பெருமாள் உபதேசித்ததை நம் மேல் கருணை கொண்டு கலியில் கோதையாக அவதரித்து நம் தமிழில் அந்த இறைவனையடையும் மார்க்கத்தை உபதேசித்துள்ளாள் கோதை. 
    இதுவே கோதையின் அவதார காரணம். மேலும் கோதை திருவரங்கநாதனை கைபிடித்த போது அவளின் வயது ஐந்து.
ஐந்து வயது பிள்ளை பக்தியின் முதிர்வால் இறைவனை அடைந்தது. இதை உலகியல் கணவன் மனைவி உறவோடு இணைத்துப் பேசுவது அர்த்தமற்ற செயலாகும்.


     இதையறியாமல், தற்கால எழுத்தாளர்கள் சிலர் ஆண்டாளை ஏதேதோ உலகியல் விஷயங்களில் சம்பந்தப்படுத்தி எழுதுவது வருத்தமளிக்கிறது.

     ஆனால், ஆண்டாள் ஒளிரும் சூரியன்  அதனை அஞ்ஞானமாகிய சில மேகங்கள் சூழ்ந்தாலும் அதன் ஞானமாகிய ஒளி மங்காது.

           ஆண்டாள் திருவடிகளே சரணம்.




16 comments:

  1. ஆண்டாள் சரணம் போற்றி, போற்றி.

    ReplyDelete
    Replies
    1. பதிவை படித்ததற்கு நன்றி சார்

      Delete
  2. ஐந்து வயது பிள்ளை யா?

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே. ஆத்மாவிற்கு வயதில்லை. உடலுக்கு தான் அனைத்து மாறுதல்களும். பக்குவமடைந்த ஆத்மா இறைவனை அடைகிறது.

      Delete
  3. நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. சமஸ்கிருதம் எனக்குச் சுத்தமாகப் பரிச்சயமில்லை. //"தூமலர் தூவி தொழுது, வாயினால் பாடி,மனத்தினால் சிந்திக்க" // இதுதான் அந்த சம்ஸ்கிருத ஸ்லோகம் என்று தெரிந்து கொண்டேன் நவீன்.

    //கோதை திருவரங்கநாதனை கைபிடித்த போது அவளின் வயது ஐந்து.//

    ஆச்சரியமான தகவல் இது எனக்கு.

    நல்ல பதிவு. பாராட்டுகள் நவீன்.

    கீதா

    ReplyDelete
  5. நவீன்,

    "கட்டைவிரல் அளவிலான பன்றி ஒன்று மூக்கிலிருந்து குதித்தது"

    புராணங்களில் ஈடுபாடு இல்லை எனினும் செய்தி வியப்பாக உள்ளது. இந்த காலத்தில் இம்புட்டு சின்ன வயசில(??) இத்தகு புராண விஷய ஞானம் பாராட்டுக்குரியது. ஆண்டாள் குறித்து கொஞ்சம் அறிந்திருக்கிறேன், கவிஞர் வைரமுத்துவின் ஆய்வு கட்டுரையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. நல்லது நண்பரே. ஆன்மீக விசயங்களை அதை அறிந்தவர் வாயிலாக அறிவதே தெளிவான கருத்துக்களைத் தரும். உதாரணமாக, கண் வலி என்றால் கண் மருத்துவரிடம் செல்வோம். இருதய கோளாறு எனில் இருதய மருத்துவரிடம் செல்வோம். ஆன்மிக விசயங்களையும் ஆத்ம பரமாத்ம ஞானமுடையவர்களிடமே பெற வேண்டும்.

      Delete
    2. நவீன்,

      எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. யார் சொல்வது மெய் என்பதற்கு பெரிய ஆராய்சசி தேவைப்படுகிறது, உங்களின் ஆய்வறிக்கை சிறப்பு. இங்கே எந்த வலி என்றாலும் General Practitioners(GP) தான் மருந்து கொடுக்கின்றனர் முதலில்

      Delete
    3. சார், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மெய் பொருளை உணர்ந்தே உபதேசித்துள்ளார்கள்.ஆகவே அதில் அனைத்தும் உண்மை.ஐயம் கொள்ள தேவையில்லை நண்பரே.

      Delete
    4. அந்த மருந்து நிரந்தரத் தீர்வாக அமைவது சந்தேகமே சார்

      Delete
  6. ஆச்சரியமான தகவல்கள் நன்பரே. தேவதைகளில் பரதேவதை என்றால் என்ன? அத்தேவதையின் குண நலன்கள் என்ன?

    ReplyDelete
  7. பரதேவதைக்கு ஆறு குணங்கள் இன்றியமையாதது, ஞானம், பலம்,ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ். இவையனைத்தும் எப்போதும் ஒருங்கே அமையபெற்ற தேவதை தான் பரதேவதை.

    ReplyDelete